Monday 31 August 2015

இது ஒரு இடுகுறிப் பதிவு !


வலைப்பதிவு என்ற ஒரு விஷயத்தை நான் செய்யத் தொடங்கி ஏழு வருடங்களுக்கு  மேல்  ஆகிவிட்டது என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

இதில் சில நாட்களாக என்னை மிகவும் யோசிக்க வைத்த விஷயம், ஏன் நான் ஆங்கிலத்தில் எழுதும் அளவிற்கு தமிழில் எழுதவில்லை என்பது தான்.

ஆங்கிலத்திலும் இத்தனை வருடத்தில் உருப்படியாக  ஒன்றும் எழுதிக் குவித்துவிடவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பதிவுகளின் எண்ணிக்கையாவது தமிழை விட அதிகமாக உள்ளது.

மொழி என்பது ஒரு கருவி. நமது எண்ணங்களையும், சிந்தனையையும், பேச்சாலோ எழுத்தாலோ மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள ஒரு கருவி. அப்படி இருக்கையில், தாய் மொழியாக முதலிலிருந்து பழகிய ஒரு மொழியை விட, பின்னர் கற்ற ஒரு மொழியில் பேசுவதும், எழுதுவதும், ஏன் சிந்திப்பதுமே கூட எப்படி இன்னும் சுலபமாக, சரளமாக வருகிறது ?

இத்தனைக்கும் படிக்கும் திறன், எழுதும் திறன் இரண்டும், இரு மொழிகளிலும் என்னைப் பொறுத்தவரை ஒரே அளவில் இருப்பதாகத் தான் நினைக்கிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தினமும் படித்தாலும், எழுத்து என்பது பெரும்பாலும் ஆங்கிலம் என்றாகிவிட்டது.

யோசித்துப் பார்த்தால் தோன்றும் சில காரணங்கள் - இன்று நம் வட்டத்தில் இருக்கும் பலரோடும் நமக்கு இருக்கும் தொடர்பு கருவிகள் மூலமாகத் தான் அமைகிறது. கருவிகளில் ஆங்கிலம் தான் சுலபமாக, இயல்பாக பயன்படுத்தும் மொழியாகப் போய்விட்டது . (ரொம்ப நெருக்கமான நட்பு அல்லது உறவு வட்டத்தில் இருப்போரிடம் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதுவதும் பழக்கமாகி விட்டது )

இன்னொரு முக்கியமான விஷயம், பேச்சுக்கும் எழுத்துக்கும் தமிழில் உள்ள வேறுபாடு. ஆங்கிலதில் மனது யோசிப்பதை எல்லாம் கை அப்படியே எழுதிக்கொண்டு போவது இயல்பாகிறது. அனால் தமிழில், மனதில் 'பேச்சுத் தமிழில்' தோன்றும் எண்ணங்களை 'எழுத்துத் தமிழில்' மாற்றித்  தான் வெளியிட வேண்டியுள்ளது. மூளையைப் பொறுத்தவரை, தமிழைத் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும் ஒரு கூடுதல் வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த நடைமுறை சிக்கலினால் தமிழில் எழுத மூளைக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாக தோன்றுகிறது.

தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசுவது என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது . அதனால் மேலே சொன்னது போல் மூளை  இந்த ஆங்கில வார்த்தைகளை எல்லாம் தவிர்த்து, தமிழ்ச் சொற்களால் மாற்றி எழுதும் போது வேகம் இன்னும் குறைகிறது.

கூடுமானவரை எளிய தமிழில் எழுதும் பழக்கம் விட்டுபோகாமல் இருக்கவாவது அடிக்கடி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்... எதைப் பற்றி எழுதுவது என்று தான் தெரியவில்லை :)  (நாம எதைப் பற்றி எழுதினாலும் எப்படியும் படிக்க ஆளில்லை.. அதனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் நம்ம அரை வேக்காட்டு அறிவை வைத்துக்கொண்டு தைரியமாய் எழுதலாம் என்பது ஒரு ஆறுதல் ! )


அது சரி, அது என்ன தலைப்பில் 'இடுகுறி' ? தமிழில் பெயர்ச்சொல் (noun) வகைகளில் இரண்டு, காரணப்பெயர் மற்றும் இடுகுறிப் பெயர்.
ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில்  வைக்கப்படுவது காரணப்பெயர்(உம் - நாலு கால்கள் இருப்பதால் நாற்காலி ) . எந்தக் காரணமும் இல்லாமல் வைக்கப்பட்டு, வழக்கத்தில் இருக்கும் பெயர்ச்சொற்கள் இடுகுறிப் பெயர்கள். அந்த மாதிரி இது எந்தக் காரணமும்  இல்லாமல், எழுத வேண்டும் என்பதற்காக எழுதிய பதிவு  - இடுகுறிப் பதிவு !



Monday 12 November 2012

தீபாவளி வாழ்த்துக்கள்




அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ... !

இன்று லட்சக்கணக்கில் விளம்பரம்  செய்து கோடிக்கணக்கில் லாபம்     பார்க்கும்  வர்த்தகமாக இருக்கும் தீபாவளிக்கு, ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த விளம்பரம் கீழே இருக்கும் படம் .

சென்னையில் பிரபலமான ராசி சில்க்ஸ், தங்கள் கடையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டதை அறிவிக்கும் விளம்பரம்  -  1957ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் இருந்து !






Sunday 1 April 2012

இன்றைய தினத்துக்கான சிறப்புப் பதிவு !

'பொதிகை' என்ற பெயரெல்லாம் சூட்டப்படாமல் வெறும் சென்னைத் தொலைக்காட்சியாக விளங்கிய காலம் தொட்டே அதற்கென்று சில பாரம்பரிய வழக்கங்கள் உண்டு... அதில் முக்கியமான ஒன்று 'ஒளியும் ஒலியும்' (அல்லது ஒலியும் ஒளியுமா - நினைவில்லை) பாடல்கள்...

அதில் பாடல்கள் தேர்வு யார் பொறுப்போ தெரியாது, அனால் கட்டாயமாக அந்த வாரத்தில் வரும் பண்டிகை சம்மந்தமாக ஒரு பாடலாவது இருந்தே ஆகும் பட்டியலில்... தீபாவளி, கிறிஸ்துமஸ், புனித வெள்ளி, இவற்றுக்கெல்லாம் தவறாமல் பாடல் உண்டு... !

'ஒ ஒ' பிரபலமாக இருந்த காலத்தில் துரதிஷ்டவசமாக அன்னையர் தினம், மகளிர் தினம், இன்ன பிற தினங்கள் எல்லாம் இந்தியாவில் பிரபலமாகவில்லை... இருந்திருந்தால் நிச்சயம் அதற்கும் பாட்டு வைத்திருப்பார்கள்.. (அதுவும் 'அம்மா' பாட்டுகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமா என்ன...)


இன்று, கிராமங்களில் பஞ்சாயத்து டிவி பார்ப்பவர்களைத் தவிர வேறு எத்தனை பேர் பொதிகை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை... 'ஒ ஒ ' ஒளிபரப்பாகிறதா என்றும் எனக்கு தெரியாது... இருந்தாலும் பாரம்பரியத்தை விடக்கூடாது... அதுவும் இந்தியர்களுக்கு கலாச்சாரம் தான் எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம் என்பதால், பொதிகையின் பாரம்பரியத்தைத் தொடரும் பொறுப்பை நான் மேற்கொள்கிறேன்...


ஆகவே, மக்களே, தமிழ் கூறும் நல்லுலகத்து சான்றோர்களே, உலகப் பதிவுகளில் முதல் முறையாக கேட்டு மகிழுங்கள் ... இன்றைய தினத்துக்கான சிறப்பு பாடல் ...




( தமிழ்ப் பதிவு போட்டு பல காலம் ஆனதால், நமக்கு உகந்த இந்த நல்ல நாளில் எதாவது எழுதாமல் விட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் பேரில் உருவான  பதிவு :) )





Sunday 25 October 2009

இலையுதிர் ...




வசந்தத்திற்கு சவால் விடும் வர்ண ஜாலம்,
வனங்களின் இந்த வானப்ரஸ்தம் ...
மரங்களின் இந்த மாலைப்பொழுது...
கடந்து போன வசந்தங்களைப் பற்றி கவலைகள் ஏதுமின்றி
எனக்கான வானப்ரஸ்தத்தை எதிர்நோக்கியபடி நான் ...

Wednesday 30 September 2009

பெண்களைத் தாக்காதோ பிரிவுத் துயர் ?!

சில நாட்களுக்கு முன் எனது youtube பட்டியலில் பாடல்கள் சேர்த்துக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் தோன்றியது....

சினிமா பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் ஒன்று, ஆண்-பெண் இருவரும் சேர்ந்து பாடும் 'டூயட்' களாக இருக்கின்றன - இல்லையென்றால் பிரிவில் அல்லது தோல்வியில் ஆண்கள் மட்டும் பாடுபவயாக இருக்கின்றன....

காதல் தோல்வியில் பெண்கள் மட்டும் பாடுவதாக அமைந்த பாடல்களை சல்லடை போட்டு தேடினாலும் தேறுவது கஷ்டம் - எனக்குத் தெரிந்தவரை 'கண்டுகொண்டேன்' படத்தில் 'எங்கே எனது கவிதை' ஒன்று தான் இந்த வகையில் அமைந்தது...

ஏன், பெண்கள் காதலில் தோற்றால் மட்டும் பாட மாட்டார்களா ? பெண்கள் தண்ணி அடிப்பது தான் தமிழ் சினிமா விதிகளுக்கு அப்பாற்பட்டது - சோகத்தில் பாடக் கூடவா முடியாது நம் கதாநாயகிகளால் ?!

நிஜத்தில் ஆண்கள் அளவுக்கு பெண்கள் பாதிக்கப் படுவதில்லையா அல்லது காட்டிக்கொள்வது இல்லையா ?
பெண்கள் நினைக்க மறக்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா ? !

Friday 17 July 2009

தாமல் தந்த செம்மல்

இன்று செய்தித் தளங்களைத் திறந்தவுடன் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திய செய்தி இசை மேதை டி.கே. பட்டம்மாளின் மறைவு...
இசையில் பெரிய அளவில் ஞானமோ தேர்ச்சியோ இல்லாத எனக்கே எதையோ இழந்தது போன்ற உணர்வு...

டி.கே. பட்டம்மாள் இசையில் சிகரம் தொட்டவர் - சிகரத்தை அடைய அவர் பயிற்சி மட்டுமின்றி புரட்சியும் செய்ய வேண்டியிருந்தது ...
போர்க்கொடி தூக்காமல், போராட்டம் நடத்தாமல் அவர் செய்த மகத்தான புரட்சி, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கர்நாடக இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டது... இன்று பட்டுப் புடவை பளபளப்பும் வைர மின்னல்களுமாய் மேடைக் கச்சேரி செய்யும் அனைத்துப் பெண் கலைஞர்களும் அவர் துவங்கி வைத்த பாதையை ஒரு கணம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது...

பெயரும் புகழும் அடைந்தும் அவரிடம் நீங்காது இருந்த எளிமையும், தேச பக்தியும், கள்ளமற்ற உள்ளமும், இன்முகமும், அவரை நினைக்கும் போதெல்லாம் நம்மை நெகிழச் செய்யும்....
பக்தியையும் தேசப் பற்றையும் இசையோடு கலந்தளித்த அவரது குரல் என்றும் நம்மிடையே ஒலித்துகொண்டிருக்கும்...
அவர் விரும்பியது போல் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என பிரார்த்திப்போம்...


Wednesday 27 May 2009

மாற்றம்...

நம் தமிழ்ப் பத்திரிக்கைகள் வருடம் தவறாமல் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன்கள் வெளியிடுவது போல் எங்களுக்கு வருடம்தோறும் இடப்பெயர்ச்சி என்பது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது ...

சென்ற வாரம் மீண்டும் இடம் பெயர்ந்தோம்... ஒரே வித்தியாசம், இந்த முறை ஊர் விட்டு ஊரெல்லாம் இல்லாமல் இப்போது இருக்கும் குடியிருப்பிலேயே இன்னொரு வீட்டுக்கு மாறினோம்...

ஒரு இடத்தை விட்டுச் செல்கிறோம் என்ற உணர்ச்சியோ புது வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்போ இன்றி மாற்றம் என்பதே இயற்கையான ஒன்று போல ஆகிவிட்டது.... ஒருவகையில் மாற்றம் என்பது தானே இயற்கை... ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு - 'மாற்றம் மட்டுமே நிலையானது' என்று.... உண்மைதான் ....

அடிக்கடி இட மாற்றம் செய்வதனால் கிடைக்கும் பலன் பல இடங்களைப் பார்ப்பதும், குறைந்த நேரத்தில் மூட்டை கட்டுவதில் நிபுணத்துவம் பெறுவதும் மட்டுமல்ல என்று நினைக்கிறேன்... மாற்றம் என்பது ஒரு வாழ்வியல் பாடமாக அமைகிறது.... எல்லா மாற்றங்களும் நாம் விரும்பும் வகையில் அமைவதில்லை....மாற்றம் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் தரக்கூடும்... அனால் மாற்றம் இயல்பானது, இயற்கையானது என்று மனம் ஒப்புக்கொள்ளும் போது பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தருகிறது.... ஏற்றுக்கொள்ளுதல் - 'acceptance' வரும்போது வாழ்க்கை சுலபமான ஒன்றாக ஆகிறது....

வாழ்க்கை ஒரு பயணம்... மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகளை ரசிக்கக் கற்றுக்கொளும்போதுதான் பயணம் இனியதாக ஆகிறது....