Monday 14 July 2008

கச்சா எண்ணெயும், கத்தும் அமெரிக்கர்களும்

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை உலகம் நீரின்றி அமைந்தாலும் அமையும், ஆனால் காரின்றி அமையாது !
குடும்பத்துக்கு ஒரு கார் என்பதே நம் நாட்டில் பெரிய விஷயம். இங்கோ, நபருக்கு ஒரு கார் என்பது அவசியம், ஆடம்பரமல்ல ....


ஒரு குடும்பத்தில் பல கார்கள் இருப்பதாலும் ஒரு நாளில் பல மணி நேரங்களைக் கார் பிரயாணங்களில் செலவிடுவதாலும் வேறு எந்தப் பொருளின் விலை ஏற்றத்தையும் விட பெட்ரோல் விலை அமெரிக்கர்களை அச்சுறுத்துகிறது...

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இங்கு சமீபத்தில் பெட்ரோல் விலையை ஒரு காலன்(அளவு, எமன் அல்ல !) நான்கு டாலருக்கும் மேல் கொண்டு சென்றுள்ளது .
எங்கும் இதைப் பற்றியே பேச்சு...கார் கம்பெனிகள் தங்கள் கார்களை விற்க புதுப்புது உத்திகளைக் கையாள்கிறார்கள்.

இதயெல்லாம் பார்த்தால் அமெரிக்காவைவிடக் குறைந்த வருமானமும் அதிக பெட்ரோல் விலையும் இருக்கும் போதும் சராசரி இந்தியர்கள் அதிக சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்று தோன்றுகிறது .

இங்கு பெரும்பாலான விஷயங்கள் சாதாரணமாகவே விலை அதிகம் தான். கறிகாய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை விட இவர்கள் பெட்ரோல் விலைக்குப் போடும் கூச்சலை சில சமயங்களில் புரிந்து கொள்வது கடினமாகத்தான் உள்ளது... ஒரு காலன் பெட்ரோலும் பாலும் இங்கு கிட்டத்தட்ட ஒரே விலை தான்...
இந்தியாவில் ஒரு லிட்டர் பாலும்  பெட்ரோலும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்கும் நாளும் வந்தால் ஒரு வேளை எனக்கு அமெரிக்கர்களைப் புரிந்துகொள்வது சுலபமாகலாம்...

Tuesday 24 June 2008

ஓர் இரவு

ஐம்பதுகளில் வெளிவந்த, இதே தலைப்புக் கொண்ட புகழ்பெற்ற திரைப்படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே தெரிவித்து விடுகிறேன்...
(எனக்கு மிகவும் பிடித்த தேஷ் ராகத்தில் அமைந்த பாவலரின் "துன்பம் நேர்கையில்" பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றதால் இந்தத் தலைப்பு என் நினைவுக்கு வந்தது )
பொதுவாக பிறந்தது முதல் நித்திரா தேவியின் நீங்காத அருள் பெற்றவள் நான்.
எந்த நிலைமையிலும் அசராது அசந்து தூங்கும் என் ஆற்றல் என்னை அறிந்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது.....
கால் நூற்றாண்டுக்கும் மேல் இப்படிப் பழகிய எனக்கு ஏனோ இந்திய மண்ணை விட்டுக் கிளம்பியதும் இன்சோம்னியா (insomnia) தொற்றிக் கொண்டது ....
என் தாய்த் திருநாட்டின் சத்தத்துக்கும் சந்தடிக்கும் பழகிய என் செவிகள் அமெரிக்க மண்ணின் அமைதியான சூழ்நிலைக்கு பழக மறுத்தன...
அதன் விளைவாய்ப் பல இரவுகள் உறக்கமின்றிப் புரளும் நிலை எனக்கும் வரும் என்று (கனவிலும் ! )நினைக்கவில்லை....
பல இரவுகளில் குறிப்பிடத்தக்க ஓர் இரவு சில நாட்களுக்கு முன்னாள்...
தலையணையுடன் முட்டி மோதியாவது தூங்கிவிடும் என்னை அன்று ஊழ்வினை உறக்கத்தின் (உறக்கமின்மையின் ?) வடிவில் உறுத்து வந்து ஊட்டியது...
பல முறை புரண்டு படுத்து , தலையணைகளை மாற்றி வைத்து, குளிர் சாதனத்தின் வெப்பத்தைக் கூட்டி, குறைத்து, இப்படி எனக்குத் தெரிந்த உத்திகள் அனைத்தையும் கையாண்டு பார்த்தும் பலன் பூஜியம்...
அடுத்த கட்டமாக பாய் சுருட்டிக்கொண்டு தரையிலும் படுத்துப் பார்த்தாகிவிட்டது...
அதிலும் பலனில்லாமல் போகவே யதோத்காரி பெருமாளைப் போல் சிறிது நேரத்திலேயே மீண்டும் பாய் சுருட்டிக்கொண்டு (யாரும் சொல்லாமலே !) கட்டிலுக்கே வந்து சேர்ந்தேன்...
இடைப்பட்ட நேரத்தில் "மெத்தென்று" இருப்பதால் தான் "மெத்தை" என்ற காரணப் பெயர் வந்ததோ என்ற அதி முக்கியமான ஆராய்ச்சியில் வேறு ஈடு பட்டேன்...
இத்தனையும் தாண்டி மணியைப் பார்த்தால் அதிகாலை மணி நாலரை...
சமீப காலத்தில் சூரிய உதயத்தைக் கண்டது அன்றாகத்தான் இருக்க வேண்டும்...
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணன் தோற்றும் எனக்கே தந்த பெருந்துயில் கொண்ட நான், இந்த மகத்தான சாதனை தந்த மகிழ்ச்சியில் சிறிது நேரத்திலயே உறங்கத்துவங்கினேன்....

Friday 9 May 2008

கால மாற்றம்

சென்ற மாதம் வரை களையிழந்து கிளை மட்டும் தாங்கி நின்ற மரங்கள்

இன்று கார் காலக் காற்றில் தலை அசைக்கின்றன

இளம் பச்சையாய் இன்று சிரிக்கும் இலைகள் இன்னும் சில மாதங்களில் நிறம் மாறும்...

முன்பனிக் காலத்தில் பழுப்பேறி மூப்படைந்து

பின்பனியில் பூமிக்கு அடியில் உறங்கச் செல்லும் ....

இளமையும், மூப்பும், மரணமும் மனிதர்க்கு மட்டும்தானா என்ன...மரங்களுக்கும் உண்டு...

ஆனால் மனிதர்க்கு மட்டும் ஏன் மரண பயம் ?

Tuesday 6 May 2008

பெயர்க் காரணம்...

என்னவளை அல்ல ...இது எண்ண வலை ...!
என் எண்ணங்களின் வலை...வலையில் என் எண்ணங்கள்...
A web of thoughts...my thoughts on the web....