Sunday 25 October 2009

இலையுதிர் ...




வசந்தத்திற்கு சவால் விடும் வர்ண ஜாலம்,
வனங்களின் இந்த வானப்ரஸ்தம் ...
மரங்களின் இந்த மாலைப்பொழுது...
கடந்து போன வசந்தங்களைப் பற்றி கவலைகள் ஏதுமின்றி
எனக்கான வானப்ரஸ்தத்தை எதிர்நோக்கியபடி நான் ...

Wednesday 30 September 2009

பெண்களைத் தாக்காதோ பிரிவுத் துயர் ?!

சில நாட்களுக்கு முன் எனது youtube பட்டியலில் பாடல்கள் சேர்த்துக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் தோன்றியது....

சினிமா பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் ஒன்று, ஆண்-பெண் இருவரும் சேர்ந்து பாடும் 'டூயட்' களாக இருக்கின்றன - இல்லையென்றால் பிரிவில் அல்லது தோல்வியில் ஆண்கள் மட்டும் பாடுபவயாக இருக்கின்றன....

காதல் தோல்வியில் பெண்கள் மட்டும் பாடுவதாக அமைந்த பாடல்களை சல்லடை போட்டு தேடினாலும் தேறுவது கஷ்டம் - எனக்குத் தெரிந்தவரை 'கண்டுகொண்டேன்' படத்தில் 'எங்கே எனது கவிதை' ஒன்று தான் இந்த வகையில் அமைந்தது...

ஏன், பெண்கள் காதலில் தோற்றால் மட்டும் பாட மாட்டார்களா ? பெண்கள் தண்ணி அடிப்பது தான் தமிழ் சினிமா விதிகளுக்கு அப்பாற்பட்டது - சோகத்தில் பாடக் கூடவா முடியாது நம் கதாநாயகிகளால் ?!

நிஜத்தில் ஆண்கள் அளவுக்கு பெண்கள் பாதிக்கப் படுவதில்லையா அல்லது காட்டிக்கொள்வது இல்லையா ?
பெண்கள் நினைக்க மறக்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா ? !

Friday 17 July 2009

தாமல் தந்த செம்மல்

இன்று செய்தித் தளங்களைத் திறந்தவுடன் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திய செய்தி இசை மேதை டி.கே. பட்டம்மாளின் மறைவு...
இசையில் பெரிய அளவில் ஞானமோ தேர்ச்சியோ இல்லாத எனக்கே எதையோ இழந்தது போன்ற உணர்வு...

டி.கே. பட்டம்மாள் இசையில் சிகரம் தொட்டவர் - சிகரத்தை அடைய அவர் பயிற்சி மட்டுமின்றி புரட்சியும் செய்ய வேண்டியிருந்தது ...
போர்க்கொடி தூக்காமல், போராட்டம் நடத்தாமல் அவர் செய்த மகத்தான புரட்சி, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கர்நாடக இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டது... இன்று பட்டுப் புடவை பளபளப்பும் வைர மின்னல்களுமாய் மேடைக் கச்சேரி செய்யும் அனைத்துப் பெண் கலைஞர்களும் அவர் துவங்கி வைத்த பாதையை ஒரு கணம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது...

பெயரும் புகழும் அடைந்தும் அவரிடம் நீங்காது இருந்த எளிமையும், தேச பக்தியும், கள்ளமற்ற உள்ளமும், இன்முகமும், அவரை நினைக்கும் போதெல்லாம் நம்மை நெகிழச் செய்யும்....
பக்தியையும் தேசப் பற்றையும் இசையோடு கலந்தளித்த அவரது குரல் என்றும் நம்மிடையே ஒலித்துகொண்டிருக்கும்...
அவர் விரும்பியது போல் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என பிரார்த்திப்போம்...


Wednesday 27 May 2009

மாற்றம்...

நம் தமிழ்ப் பத்திரிக்கைகள் வருடம் தவறாமல் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன்கள் வெளியிடுவது போல் எங்களுக்கு வருடம்தோறும் இடப்பெயர்ச்சி என்பது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது ...

சென்ற வாரம் மீண்டும் இடம் பெயர்ந்தோம்... ஒரே வித்தியாசம், இந்த முறை ஊர் விட்டு ஊரெல்லாம் இல்லாமல் இப்போது இருக்கும் குடியிருப்பிலேயே இன்னொரு வீட்டுக்கு மாறினோம்...

ஒரு இடத்தை விட்டுச் செல்கிறோம் என்ற உணர்ச்சியோ புது வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்போ இன்றி மாற்றம் என்பதே இயற்கையான ஒன்று போல ஆகிவிட்டது.... ஒருவகையில் மாற்றம் என்பது தானே இயற்கை... ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு - 'மாற்றம் மட்டுமே நிலையானது' என்று.... உண்மைதான் ....

அடிக்கடி இட மாற்றம் செய்வதனால் கிடைக்கும் பலன் பல இடங்களைப் பார்ப்பதும், குறைந்த நேரத்தில் மூட்டை கட்டுவதில் நிபுணத்துவம் பெறுவதும் மட்டுமல்ல என்று நினைக்கிறேன்... மாற்றம் என்பது ஒரு வாழ்வியல் பாடமாக அமைகிறது.... எல்லா மாற்றங்களும் நாம் விரும்பும் வகையில் அமைவதில்லை....மாற்றம் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் தரக்கூடும்... அனால் மாற்றம் இயல்பானது, இயற்கையானது என்று மனம் ஒப்புக்கொள்ளும் போது பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தருகிறது.... ஏற்றுக்கொள்ளுதல் - 'acceptance' வரும்போது வாழ்க்கை சுலபமான ஒன்றாக ஆகிறது....

வாழ்க்கை ஒரு பயணம்... மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகளை ரசிக்கக் கற்றுக்கொளும்போதுதான் பயணம் இனியதாக ஆகிறது....

Saturday 16 May 2009

தமிழ்ப் பேச்சு, பல் போச்சு

ஏதோ ஒரு திடீர் உந்துதலில் சில வாரங்களுக்கு முன் வீட்டில் இந்தியத் தொலைகாட்சி சேனல்கள் சிலவற்றின் இணைப்புக் கொடுத்தோம் .... அதில் தமிழில் விஜய் டிவியும் ஒன்று... எப்போதாவது சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தவிர ஆர்வத்தைத் தூண்டும்படியாக எதுவும் இல்லை...

கேளிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தங்களின் அணிவகுப்புகளுக்கு இடையே "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் " என்று சிறுவர்களின் தமிழில் பேசும் திறனுக்கான ஒரு போட்டி ...
சிறுவர்களிடையே மொழிப்பற்றும், தாய்மொழியில் பேசுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் தேவையான ஆற்றலும் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று ...
இத்தனை குழந்தைகள் தமிழில் தடையின்றி பேசப் பயிற்சி எடுத்துகொள்வதும், பேச முன்வருவதும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று...

அனால் ஒரு விஷயம் - பெரும்பாலான சுட்டிகள் ஏனோ ஆவேசமாய், பல்லைக் கடித்துக்கொண்டு, கைகளை ஆட்டி, நாடக பாணியில் முழக்கமிடுகிறார்கள்...
இனிமையாய்ப் பேசினால் தமிழ்ப் பற்று வளராதா என்ன ... ஏதோ தமிழில் வல்லினம் மட்டுமே உள்ளது போல் சொற்களை அழுத்தம் திருத்தமாய்க்  கடித்துத் துப்பி தவிடு பொடி ஆக்குவதை பயிற்சி கொடுக்கும் பெற்றோர் கொஞ்சம் கவனித்தல் நலம்...
அல்லது பால் பற்கள் தானே, போனால் போகட்டும், தொலைக்காட்சியில் பேசும் வாய்ப்புதான் முக்கியம் என்று நினைக்கிறார்களோ என்னவோ பெற்றோர் ... :)
எது எப்படியோ, சுட்டிகளே, சொல்லும் முக்கியம், பல்லும் முக்கியம் ... எனவே, மெல்லினம், இடையினம், ஆகியவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் :)

Thursday 12 March 2009

slumdog millionaire ஐ இன்னும் பார்க்காத பாவிகளின் பட்டியலில் என் பெயர் உள்ளது...
ஆனால் ஏ ஆர் ரகுமானைப் பாராட்டி ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியதன் மூலம் அந்தப் பாவத்திற்கு ஓரளவு பரிகாரம் செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்...(பரிகாரம் இங்கே )
சில நாட்களுக்கு முன்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் ஒன்று ஒரு விமானச் சீட்டு முன்பதிவு செய்யும் வலைத் தளத்திலிருந்து ... "ச்லம்டாக் விலையில் மில்லியனேர் சேவை" என்ற வாக்கியத்தோடு ...
அடக் கஷ்டகாலமே...தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது...
எதைத் தின்னால் இவர்களுக்கெல்லாம் பித்தம் தெளியும் என்று தெரியவில்லை ... :)

Friday 6 March 2009

மகான், காந்தி மகான்...

ஒரு வழியாக காந்தியடிகள் உபயோகித்த பொருட்களை யார் வாங்குவது என்ற சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது ...

காந்தியின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்து மண்ணைப் போட்டு மூடியவர்கள் இன்று அவரது கண்ணாடிக்கும் கப்பரைக்கும் உரிமை கொண்டாடி கூச்சல் போடுவதைக்கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை...

நியாயமாகத் தமக்கு சொந்தமான பொருட்களை ஒருவர் ஏலத்தில் விடலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... அது இந்தியாவுக்கு தான் சொந்தம், கொடுத்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதோ, விற்கக் கூடாது என்று தடுப்பதோ எந்த விதத்தில் நியாயம் என்று எனக்குப் புரியவில்லை...
சரி, அவை நமது சரித்திரச் சின்னங்கள் என்று வாதம் செய்தால், நமது நாடெங்கும் உள்ள மற்ற சரித்திர, கலாசார சின்னங்களைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை இல்லை ?
சுயநலமும் சொத்து சேர்ப்பதும் மட்டுமே முக்கியமென்று நினைப்போர் தன் கண்ணாடிக்குக் குரல் கொடுப்பதை காந்தியே விரும்ப மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்....

இதில் வேடிக்கை என்னவென்றால் மது ஒழிப்பை முக்கியமென்று நினைத்தவரின் பொருட்களை வாங்க கடைசியில் மதுபானம் விற்ற காசுதான் கைகொடுத்தது... ம்ம்ம் ...நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது ?

கமலின் 'காதலா காதலா' படத்தில் வரும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.... "ரூபா நோட்டுல வாழுறாரு காந்தி... வாய் நிறைய ஜோரா புன்னகைய ஏந்தி..."

Wednesday 11 February 2009

எது எனது ?

வளர்ந்த வீட்டில் வாழவில்லை,
வாழும் வீடு சொந்தமில்லை...
சொந்தவீட்டில் வசிக்கவில்லை,
வசிக்கும் இடத்தில் எதுவும் எனதில்லை....
இருப்பிடம் பலமுறை மாறும்போது
சொந்தமென்று எதைச் சொல்வது ...
பிறந்ததும் புகுந்ததும் வைணவக் குடும்பமென்பதால்,
சொந்த வீடென்பது அந்தமில் பேரின்ப வீடு மட்டும்தானோ .... ?!