Friday 17 July 2009

தாமல் தந்த செம்மல்

இன்று செய்தித் தளங்களைத் திறந்தவுடன் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திய செய்தி இசை மேதை டி.கே. பட்டம்மாளின் மறைவு...
இசையில் பெரிய அளவில் ஞானமோ தேர்ச்சியோ இல்லாத எனக்கே எதையோ இழந்தது போன்ற உணர்வு...

டி.கே. பட்டம்மாள் இசையில் சிகரம் தொட்டவர் - சிகரத்தை அடைய அவர் பயிற்சி மட்டுமின்றி புரட்சியும் செய்ய வேண்டியிருந்தது ...
போர்க்கொடி தூக்காமல், போராட்டம் நடத்தாமல் அவர் செய்த மகத்தான புரட்சி, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கர்நாடக இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டது... இன்று பட்டுப் புடவை பளபளப்பும் வைர மின்னல்களுமாய் மேடைக் கச்சேரி செய்யும் அனைத்துப் பெண் கலைஞர்களும் அவர் துவங்கி வைத்த பாதையை ஒரு கணம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது...

பெயரும் புகழும் அடைந்தும் அவரிடம் நீங்காது இருந்த எளிமையும், தேச பக்தியும், கள்ளமற்ற உள்ளமும், இன்முகமும், அவரை நினைக்கும் போதெல்லாம் நம்மை நெகிழச் செய்யும்....
பக்தியையும் தேசப் பற்றையும் இசையோடு கலந்தளித்த அவரது குரல் என்றும் நம்மிடையே ஒலித்துகொண்டிருக்கும்...
அவர் விரும்பியது போல் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என பிரார்த்திப்போம்...