Wednesday 27 May 2009

மாற்றம்...

நம் தமிழ்ப் பத்திரிக்கைகள் வருடம் தவறாமல் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன்கள் வெளியிடுவது போல் எங்களுக்கு வருடம்தோறும் இடப்பெயர்ச்சி என்பது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது ...

சென்ற வாரம் மீண்டும் இடம் பெயர்ந்தோம்... ஒரே வித்தியாசம், இந்த முறை ஊர் விட்டு ஊரெல்லாம் இல்லாமல் இப்போது இருக்கும் குடியிருப்பிலேயே இன்னொரு வீட்டுக்கு மாறினோம்...

ஒரு இடத்தை விட்டுச் செல்கிறோம் என்ற உணர்ச்சியோ புது வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்போ இன்றி மாற்றம் என்பதே இயற்கையான ஒன்று போல ஆகிவிட்டது.... ஒருவகையில் மாற்றம் என்பது தானே இயற்கை... ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு - 'மாற்றம் மட்டுமே நிலையானது' என்று.... உண்மைதான் ....

அடிக்கடி இட மாற்றம் செய்வதனால் கிடைக்கும் பலன் பல இடங்களைப் பார்ப்பதும், குறைந்த நேரத்தில் மூட்டை கட்டுவதில் நிபுணத்துவம் பெறுவதும் மட்டுமல்ல என்று நினைக்கிறேன்... மாற்றம் என்பது ஒரு வாழ்வியல் பாடமாக அமைகிறது.... எல்லா மாற்றங்களும் நாம் விரும்பும் வகையில் அமைவதில்லை....மாற்றம் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் தரக்கூடும்... அனால் மாற்றம் இயல்பானது, இயற்கையானது என்று மனம் ஒப்புக்கொள்ளும் போது பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தருகிறது.... ஏற்றுக்கொள்ளுதல் - 'acceptance' வரும்போது வாழ்க்கை சுலபமான ஒன்றாக ஆகிறது....

வாழ்க்கை ஒரு பயணம்... மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகளை ரசிக்கக் கற்றுக்கொளும்போதுதான் பயணம் இனியதாக ஆகிறது....

Saturday 16 May 2009

தமிழ்ப் பேச்சு, பல் போச்சு

ஏதோ ஒரு திடீர் உந்துதலில் சில வாரங்களுக்கு முன் வீட்டில் இந்தியத் தொலைகாட்சி சேனல்கள் சிலவற்றின் இணைப்புக் கொடுத்தோம் .... அதில் தமிழில் விஜய் டிவியும் ஒன்று... எப்போதாவது சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தவிர ஆர்வத்தைத் தூண்டும்படியாக எதுவும் இல்லை...

கேளிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தங்களின் அணிவகுப்புகளுக்கு இடையே "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் " என்று சிறுவர்களின் தமிழில் பேசும் திறனுக்கான ஒரு போட்டி ...
சிறுவர்களிடையே மொழிப்பற்றும், தாய்மொழியில் பேசுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் தேவையான ஆற்றலும் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று ...
இத்தனை குழந்தைகள் தமிழில் தடையின்றி பேசப் பயிற்சி எடுத்துகொள்வதும், பேச முன்வருவதும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று...

அனால் ஒரு விஷயம் - பெரும்பாலான சுட்டிகள் ஏனோ ஆவேசமாய், பல்லைக் கடித்துக்கொண்டு, கைகளை ஆட்டி, நாடக பாணியில் முழக்கமிடுகிறார்கள்...
இனிமையாய்ப் பேசினால் தமிழ்ப் பற்று வளராதா என்ன ... ஏதோ தமிழில் வல்லினம் மட்டுமே உள்ளது போல் சொற்களை அழுத்தம் திருத்தமாய்க்  கடித்துத் துப்பி தவிடு பொடி ஆக்குவதை பயிற்சி கொடுக்கும் பெற்றோர் கொஞ்சம் கவனித்தல் நலம்...
அல்லது பால் பற்கள் தானே, போனால் போகட்டும், தொலைக்காட்சியில் பேசும் வாய்ப்புதான் முக்கியம் என்று நினைக்கிறார்களோ என்னவோ பெற்றோர் ... :)
எது எப்படியோ, சுட்டிகளே, சொல்லும் முக்கியம், பல்லும் முக்கியம் ... எனவே, மெல்லினம், இடையினம், ஆகியவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் :)